உருவ வழிபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை என்பதால் இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை!
நாம் யாரும் கடவுளை கண்டதில்லை ! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்என்பது இந்த மண்ணின் பழமொழி ! யாரும் காணாத கடவுளுக்கு உருவம் கொடுப்பதாக இருந்தால் அது மனிதனின் கற்பனையாகத்தான் இருக்க முடியும் !
இப்படி ஆளுக்கு ஆள் தங்கள் கற்பனைப்படி உருவம் கொடுக்க ஆரம்பித்ததன் விளைவுதான் இங்கு இவ்வளவு கடவுள்கள் உருவாகக் காரணம் ஆனது!
கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனும் பண்பை கற்பனை செய்து அனைத்தையும் பார்க்க வேண்டுமெனில் நான்கு பக்கமும் முகமும் கண்ணும் இருக்க வேண்டுமே எனும் கற்பனைதான் நான்கு முகக் கடவுள்!
கடவுள் தீயவர்களை கடுமையாக தண்டிப்பவர் எனும் பண்பை தண்டிப்பதென்றால் ஆயுதம் வேண்டுமே எனும் மனிதனின் கற்பனைதான் கையில் சூலம், வாள், வேல், கதை, சக்கரம் எனும் ஆயுதங்கள் கொண்ட கடவுள்கள் ! அதன் விளைவுதான் எந்திரத் துப்பாக்கியுடன் விநாயகர் பாகுபலி விநாயகர் எல்லாம்!
மக்களை கடவுளின் பெயரால் பிரிக்கும் இந்த வழி கேட்டைக் களைய இஸ்லாம் பலகடவுள் கோட்பாடு உருவாகக் காரணமான உருவ வழிபாட்டை முளையிலேயே கிள்ளி எறிகிறது !
மேலும் இஸ்லாத்தில் மட்டுமல்ல எந்த மதத்திலும் உருவ வழிபாடுக்கு ஆதாரம் இல்லை !
அவன் வடிவத்தைக் காண முடியாது ! [ஸ்வதேஸ்வரா உபநிஷத்]
யாதொரு விக்கிரஹத்தை உருவாக்கி நமஸ்கரிக்க வேண்டாம்! [பைபிள் யாத்திராகமம் 20:14]
மேலும் உருவவழிபாடு என்பது மனிதனின் உள்ளத்திலும் இல்லை !
எப்படி சொல்கின்றீர்கள் ?
உருவங்களை வழிபடுவோர் அந்த உருவங்களுக்கு முன்னால் நிற்கும் போது கண்களை மூடி வணங்குவதை காணலாம்! கண்களை மூடி வணங்குவதற்கு எதற்கு உருவம்? ஆக மனிதன் உள்ளத்தில் இயற்கையாக இருப்பது அரூப வழிபாடுதான் ! இவனாகவே செயற்கையாக உருவாக்கி கொண்டது தான் உருவ வழிபாடு!
சரி ! நபிகளாருக்கு ஏன் உருவம் இல்லை ?
கடவுளைப் பற்றி சொல்ல வந்தவர்கள் எல்லோரையும் அவர்களது மறைவுக்குப் பின் மக்கள் கடவுளாக்கி விட்டார்கள்! உதாரணம் இயேசு அவர் போதித்தது இறைவன் ஒருவன் எனும் கொள்கையைதான் போதிக்க வந்தார் ! இன்றைக்கு அவர் கடவுளாக்கப்பட்டு விட்டார் !
புத்தர் கடவுளைப் பற்றி பேசவே இல்லை ! ஆனால் அவரும் கடவுளாக்கப்பட்டு சிலை வழிப்பாட்டை சொல்லாத அவருக்குதான் உலகில் அதிகமான சிலைகள் வைத்து வணங்கப்படும் ஒருவராகி விட்டார் !
இதற்கெல்லாம் காரணம் இவர்கள் உருவத்தை விட்டு சென்றதுதான் ! ஆனால் நபிகள் நாயகம் உருவ வழிபாட்டுக்கான இந்த வாசலை அடைக்கிறார்கள் ! அதனால் தான் அவருக்கு முன்னால் வாழ்ந்த ஏசுவுக்கும் புத்தருக்கும் சிலை இருக்கிறது நபிகளாருக்கு சிலை இல்லை ! கற்பனையாக யாரும் வரைந்தாலும், சிலை வடித்தாலும் இஸ்லாமிய சமுதாயம் அனுமதிப்பதில்லை!
இப்போது சொல்லுங்கள் நபிகளார் உருவத்தை விட்டு செல்லாதது சரியா? தவறா ?
No comments:
Post a Comment